இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Saturday, November 29, 2008
நாங்கள் இந்தியர்கள்.
"எங்கிருந்தோ வந்த எவனோ
என்னென்னவோ செஞ்சிட்டுப்போக
ஒன்னா மண்ணா இருந்தவங்க எல்லாம்
தாயாப் புள்ளயா பழகினவங்க எல்லாம்
தள்ளிவச்சு பாக்க ஆரமிச்சிட்டாங்களே
பத்துப் பைத்தியக்காரங்க
புத்திக்கெட்டு செஞ்சவேலைக்கு
பல லெச்சம் பேரு வாழ்க்கை இங்க
பத்திகிடுமோன்னு பயமா இருக்கே
சுட்டுக் கொன்னது எல்லாம்
சொந்த சகோதரன் தான்னு
சொல் புத்திக்குத் தெரியலின்னாலும்
சொய புத்திக்கும் புரியலியா
என்னத்த சாதிக்க இப்படி
எடுபட்டுப் போயி திரியரானுவளோ
இன்னும் யார வாழவைக்க இப்படி
இருக்கரவங்கள அழிக்கிறானுவளோ
தன்னக் கப்பாத்திக்கப் பெரிசுங்க
உன்ன உசுப்பேத்தி உடுதாங்க
உண்ம தெரியாம நீயும் இப்படி
நேந்து வுட்ட மாதிரியே திரியரியே
அமரிக்காவுல செஞ்சுப்புட்டு அந்த
ஆப்கானிஸ்தானயே அழிச்ச மாதிரி
இந்தியாவுல செஞ்சுப்புட்டு இப்போ
எந்தக் குடிய கெடுக்கப்போரியோ
இந்தியாதானேன்னு எகத்தாளமா
இங்கே வந்து மோதிட்டியே
எங்களுகுள்ளேயே அடிச்சுகிட்டாலும்
எதிரின்னு வெளியே இருந்து வந்துட்டா
எவனா இருந்தாலும் சரிதான்
ஒண்ணுபோல சேந்து நாங்க
ஒரு பயலகூட விடாம
ஏன்னு கேக்க நாதியில்லாம
ஏறி மிதிச்சிப் போட்டுட்டு
எங்கபாட்டுக்குப் போய்கிட்டேயிருப்போம்".
Friday, November 28, 2008
கள்வனா?,காதலனா?,...
குமரிப் பெண் அவள்
குடியிருக்கும் குட்டிக்
குளுகுளு குடில்
மோசமான வானிலை வெளியே
லேசாகத் திறந்திருக்கிறது சன்னல்
தனியே இருக்கிறாள் அவள்
தள்ளியே இருக்கிறது மற்ற அறைகள்
வேலி தாண்டி உள்ளே வந்து
சன்னல் வழியே மெல்ல நுழைந்து
அக்கம் அக்கம் பார்த்து
அவள் பக்கம் வந்து
யாரிடமும் பயம் இல்லாமல்
எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல்
அவளிடம் கூட அனுமதி கேட்க்காமல்
அவள் கன்னத்தில் முத்தமிட்டு
அங்கேயே அடிவாங்கி
அப்போதே சாகும்
அந்த அப்பாவி
.
.
.
கொசு
Tuesday, November 25, 2008
நண்பனுக்கு ஒரு கடிதம்...
அன்பு நண்பன் இளங்கோவனே
அன்பு செலுத்த புது நாய்க்குட்டி தேடும்
இனிய அன்பனே
இன்றும் என்றும் நீ
இளம் கோ வாகவே
இருக்க விரும்புகிறேன்
இருக்கவேண்டும் நம் நட்பும்
இளமையாகவே
இதுபோல இனிமையாகவே
கவனிக்க....!
நீடிக்கும் நட்புக்குத் தடை போட
ஆர்ப்பரிக்கும் அன்புக்கு அணை கட்ட
படை திரட்டி வந்திருக்கிறார்கள்
பல திட்டம் தீட்டி இருக்கிறார்கள்
போட்டிகள் பலவும் வைத்திருக்கிறார்கள்
அவர்கள் வென்றால்
நட்புக்கு நிரந்தரத் தடையாம்
அவர்கள் வீழ்ந்தால்
நான் வெல்வேன்
நாம் வெல்வோம்
நம் நட்பு வெல்லும்
அந்தத்த் தடைக்குத் தான்
இனிமேல் என்றும் தடை
சில எளியக் கேள்விகளை
அவர்கள் முன்
எடுத்து வைத்திருக்கிறேன்
சரம் சரமாய்த் தொடுத்திருக்கிறேன்
"தொலைவில் தெரிகிறதே
தொடு வானம்,
அதை சீக்கிரம்
தொட்டு வா பார்க்கலாம் ! "
துரத்திக் கொண்டு போய் இருக்கிறார்கள்
"தூரத்தில் இணைகிறதே
தண்டவாளம்,
அது சேரும்
புள்ளீயின் தூரம்
இங்கிருந்து அளந்து வா பார்க்கலாம் !"
அளந்து கொண்டு போய் இருக்கிறார்கள்
"பெரியது எது?
புவியின் ஈர்ப்பு விசையா?
பூவின் ஈர்ப்பு விசையா?
புவியின் ஈர்ப்பு வென்றிருந்தால்
பூவிலிருந்து காய் வீழ்ந்திருக்கும் .
காய் இல்லையெனில் கனி இல்லை,
நீ இல்லை நான் இல்லை,
இப்போது சொல்,
எது பெரியது ?
அறிந்து வா பார்க்கலாம் !"
மரத்தின் கீழ் அமர்ந்து
மேல் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
"பயங்கர அழகு:
கொஞ்சம் கூடுதல்:
ரொம்ப குறைச்சல்:
எதிர் எதிர்ச் சொற்கள்
ஒன்றாய் கூடி
ஒரே அர்த்தம் தரும்
வார்த்தைகள் இன்னும்
பத்து கொண்டு வா பார்க்கலாம் !"
பல திசைகளுக்கும் பறந்து போய் இருக்கிறார்கள்
எனக்குத் தெரியும்
அவர்களில் யாரும்
திரும்பவேப் போவதில்லை
உனக்குத் தெரியும்
இதோ நான்
வந்து கொண்டிருக்கிறேன்
அந்த அழகான
புது நாய்க் குட்டியாக.....
என்னவள்.....
அவள்....
மரணத்தை விடக் கொடியது
அவளின் பிரிவு
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு யுகமாய்க் கழியும்
அவள்....
சொர்க்கத்தை விட சிறந்தது
அவளின் நினைவு
ஒரு யுக நேரமும்
சிறு மணித் துளியாய் கரையும்
அவள்....
இசையை விட இனியது
அவளின் காலடி ஓசை
என்னருகே கேட்கும்போது
அந்த உலகமே என்னச் சுற்றும்
அவள்....
ஊஞ்சலையும் மிஞ்சியது
அவளின் கருவிழியின் அசைவு
நினைத்தவுடன் தூக்கம் என்னைத்
தூக்கிக்கொண்டு தாலாட்டும்
அவள்...
கடவுளையும் தாண்டியது
அவளின் கவனிப்பின் அளவு
காயம் பட்ட போதும் என்னை
கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றும்
அவள்....
சுவாசத்தை விட அவசியமானது
அவளின் அளவில்லாத பாசம்
மனது உடைந்த நேரத்திலும் என்னை
மயிலிறகாய் வருடி விடும்
அவள்....
என்னவள்.....
என் அம்மா.......
Sunday, November 23, 2008
வயசுக் கோளாறு !!
அந்தி சாயும் வேளையில்
அந்தப் பெட்டிக்கடையின் மறைவில்
ஆனந்த அதிர்ச்சிக்காக
என்னவளின் பார்வைக்காக
எந்தன் தேவதையின் வருகைக்காக
நாளெல்லாம் பார்த்ததுநிற்பேன்
காற்றில் படபடத்து
கண்களுக்கு வலை வீசும்
பளபளப்புக் கூந்தல் பார்த்தவுடன் என்
பாதம் வானத்திலே மிதக்குமே
பட்டுச் சேலை பரபரக்க
பட்டுப்பூச்சியாய் மிதந்துவரும்
பாவையின் அழகு பார்க்க
பத்துநாளானாலும் பாதையிலேயே
பட்டினியாய்க் காத்து இருப்பேனே
ஓரவிழிப் பார்வையின்
ஒரு கண் அசைவிற்காக
ஒன்றல்ல,இரண்டல்ல
ஒன்பது நாளானாலும்
ஓரமாகவே காத்துக் கிடப்பேனே
ஆயிரம் பேருக்கு நடுவில்
அவள் இருந்தாலும் அந்த அறிவுள்ள
சுண்டுவிரல் அசைவினில் எனக்கு
சுத்தமாய் ஆயிரம் அர்த்தங்கள் புரிந்ததே
மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
மறுத்துப்பேசியோரை எல்லாம் ஏசி
சொந்தங்களின் சொல்லை மீறி
சொந்தமாக்கிக் கொண்டேனே அவளை ! !
இன்று.........
கதிரவனின் ஒளி பரவும் நேரத்தில்
கைதியைப்போல கட்டிலின் ஒரத்தில்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியோடு
என்னவள் பார்வைக்காக
எட்டு மணியிலிருந்து காத்திருக்கிறேன்
பலவண்ணம் ஏற்ற ஏதுவாய்
பதப்படுத்தப்பட்ட பரட்டைக் கூந்தலுடன்
படுக்கையிலிருந்து எழுந்து என்னிடம்
பகல் காப்பிக் கேட்பவளைப் பார்த்து
கலங்கிப் போய் இருக்கிறேன்
பகல் பொழுது முழுவதும்
இரவு ஆடையிலிருந்து வெளியேராமல்
அங்கி போட்ட சாமி போல
தூங்கித் தூங்கி விழும்போதெல்லாம்
அந்தநாள் நினைவில்
ஏங்கியபடி இருக்கிறேன்
ஓரமாகவே இருந்து பார்த்தவனுக்கு
நேராகப் பார்த்தவுடன்தானே தெரிந்தது
அவளது பார்வையே ஒருமாதிரியாய்
ஓரமாகத்தான் இருக்குமென்று
பரிதவித்துப் போய் இருக்கிறேன்
ஒன்றல்ல இரண்டல்ல
ஒன்பது முறை விளக்கினாலும்
ஒன்று கூட புரிவதில்லை
பட்டயப் படிப்பு முடிக்கவே இன்னும்
பத்துப் பாடம் பாக்கியாம்
தெரிந்ததிலிருந்து இதயம்
தடுமாறிப்போய் இருக்கிறேன்
"மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
மறுத்துப் பேசியோரை எல்லாம் ஏசி
சொந்த்ங்களின் சொல்லை மீறி
நானாகவேத் தான் போய் மாட்டிக்கிட்டேனா??????"
Friday, November 21, 2008
கேள்வியும் பதிலும் ..?!
கேட்க்கும் கேள்விகளுக்கெல்லாம்
கவனமாய் வந்து விழுகின்றன பதில்கள்
"கூடிக்கொண்டே போகிறதே விலைவாசி" என்றால்
கேரளாவை விட குறைச்சல் என்கிறார்கள்
"பேருந்துக்கட்டணம் அதிகம்" என்றால்
பஞ்சாபில் பாதிதான் என்கிறார்கள்
"மின்கட்டணம் கூடுதல்" என்றால்
மிசோரத்தில் முக்கால் வாசிதான் என்கிறார்கள்
"ராத்திரியெல்லாம் மின்தடை" என்றால்
ராஜஸ்தானில் மின்சாரமே இல்லை என்கிறார்கள்
எந்தக்கேள்வி கேட்டாலும்
இந்தியாவின் பெயரைச் சொல்லி தப்பிக்கிறார்கள்
ஆனாலும் இந்தக் கேள்விக்கு மட்டும்
அவர்களிடம் இருந்து பதிலே இல்லை
"ஒருவேளையாவது கஞ்சி
ஒழுங்காய் குடிக்கவேண்டும் இங்கே
ஒருவழியாவது சொல்லுங்கள்" என்றால்
விடை தெரியாமல் முழிக்கிறார்கள்
விழி பிதுங்கி நிற்க்கிறார்கள்
ஐந்தாண்டு என்று இருப்பதை
அவ்வப்போது என மாற்றிவிட்டால்
அந்தக் கேள்விக்கான விடைகள்
அவ்வப்போதே கிடத்துவிடும்!
Thursday, November 20, 2008
தனிக் குடித்தனத்தில்.....
திருமணம் முடிந்து
இருமனம் இணையும்
தேனிலவும் தாண்டியது
தவிர்க்கவே முடியாத அந்த
தனிக்குடித்தனமும் ஆரம்பமானது
எனக்கு அவளைப் பற்றி
எல்லாம் தெரிந்துவிட்டது
என்ற நினைப்பில் மண் விழுந்தது
எதிர்பாராமல் ஒருநாள்
எனக்கு அந்த உண்மை தெரிந்தது
அவளுக்கு எண்ணை பிடிக்கவில்லை!
அன்றுமுதல் எனக்கு உறக்கமில்லை
அனுதினமும் இதனால் வந்ததுதொல்லை
எவ்வளவோ சொல்லியும் புரியவில்லை
என்ன செய்யவேண்டும் தெரியவில்லை
பிரச்சினையை முடிக்க முடியாததால்
பாதிப்பின்றி முடிவெடுக்கத் தெரியாததால்
விட்டுக்கொடுக்கவும் திடமில்லாததால்
எதிர்த்துப்பேசவும் மனமில்லாததால்
எனக்கும் எண்ணை பிடிக்காமல் போனது!!
எங்களுக்கு வேறு வழியே இல்லை
இப்படியே தொடர மனமும் இல்லை
ஒன்றாய் உட்க்கார்ந்து பேசினோம்
ஒருமனதாய் முடிவு செய்தோம்
.
.
.
.
.
.
.
.
.
.
எண்ணை இல்லாமல்
தோசை சுட்டு சாப்பிட்டோம்.!!!
Wednesday, November 19, 2008
கண் கெட்டபின்...?
பாலர் பருவம்
பள்ளிப் பாடங்கள் எல்லாம்
பலாச்சுளை போல இனித்தது
ஆசிரியர் எல்லோரும்
ஆண்டவன் போலத் தெரிந்தனர்
அப்போது தோன்றியது
"அதிகம் படிக்க வேண்டும்"
கல்லூரி வாழ்க்கை
கண்முன்னே புதிய களம்
கண்காணிப்பு இல்லாத கானகம்
கட்டுப்பாடு இல்லாத பரந்த உலகம்
பேராசிரியர் எல்லோரும்
பேராபத்தானவராய்த் தெரிந்தனர்
வெளியாகிறதா புதிய திரைப்படம்
வேண்டுமே முதல் வரிசையில் இடம்
எடுத்துவைப்போம் கோரிக்கைகளை
எடுத்துக்கொள்வோம் விடுமுறையை
ஆகா அனுபவித்தோம் வாழ்க்கையை
அந்த இடத்தில் படிப்பா?
அது பற்றி தோன்றவே இல்லை!
அடுத்தக் கட்டம்
அங்கே பள்ளி இல்லை,கல்லூரி இல்லை
ஆனாலும் அனுபவப் பாடம்
அதுவாகவே கொஞ்சமாய்ப் புரிந்தது
புத்தியில் எதுவோ
புரிந்ததுபோலத் தெரிந்தது
"எதற்கும் கொஞ்சம் படித்திருக்கலாமோ?"
தற்போது கலவரமாய் நிலவரம்
தலை தப்பியே ஆக வேண்டும்
ஒரு வேலை இருந்தால் தான்
ஒருவேளை உணவுக்கு உத்திரவாதம்
கண் திறந்தார் கடவுள்
கிடைத்தது கதவு திறந்துவிடும் வேலை
முதல் நாள் வேலை
முதல் கதவு திறக்கிறேன்
முதலாளியாய் வந்தவர்
கல்லூரியில் எனக்கு
மூன்றாண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து
முறையாய் படித்து முடித்த
மூன்றாவது தெரு முத்து சாமி
கண்கள் குளமாகிறது
"கண்டிப்பாய் படித்திருக்கவேண்டும்"
Tuesday, November 18, 2008
திட்டம் பல தீட்டி....
குடும்பங்கள் சில கூட்டாய் சேர்ந்து
நெடுநாள் திட்டம் பல தீட்டி
இல்லாத தாத்தாவுக்கு
இதய நோய் என்று
அலுவலகத்தில் காரணம் சொல்லி
அவசர விடுப்பு எழுதிக் கொடுத்து
குதூகலமாய்க் கூடிக் கிளம்பினோம்
குடும்ப,இன்பச் சுற்றுலா
ஆரவாரமாய்க் குதித்து
அடித்துப்பிடித்து இடம் போட்டு
ஆசுவாசமாய் மூச்சு விட்டு
அமர்க்களமாய்க் கால் நீட்டி
அரைத்தூக்கம் தூங்கி எழுந்தபின்
கையில் பட்டது
பையில் உள்ள சாவி.
உள் மனதில் ஒரு சாத்தான்
உரக்கக் கத்தத் தொடங்கியது
"எதையோ மறந்துவிட்டாய்"
மறக்க வாய்ப்பே இல்லையே!
மறுமுறை சரிபார்த்து விடலாமா?
நகைப்பெட்டியைப் பூட்டி சாவியை
அஞ்சறைப்பெட்டிக்குள் வைத்தாகிவிட்டதே!
எரிவாயு உருளையை துண்டித்து
எரிந்த விளக்குகளை அணைத்தாகிவிட்டதே!
தண்ணீர்க் குழாயை மூடி
திறந்த பின்கதவை மூடியாகிவிட்டதே!
சுற்றுலா செல்வதை
சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம்
பெறுமையோடு சொல்லி
வயிற்றெரிச்சலைக் கிளப்பி
வீடு வந்து மறக்காமல்
சாவி எடுத்து பையில்
பத்திரமாய்ப் போட்டு
பதட்டமே இல்லாமல் கிளம்பி வந்தோமே!
ஆகா!! வீட்டைப் பூட்டினோமா?????
சுற்றுலா தொடங்கிய
முதல் நாளே என்
தலை சுற்றத் தொடங்கி விட்டது.
அவசியம் வேணும் வாரிசு அரசியல் !
இன்று சனநாயகநாட்டில்
இந்தத் தலைவர்களின்
வாரிசாகப் பிறந்ததாலேயே
வந்து சேர்ந்துவிடும் அந்த
அடுத்தத் தலைமைப் பதவியும்
அதற்கான முதன்மைத் தகுதியும்
இன்று அரசைத் தலைவர்கள் ஆள
நாளை அவர்களின் வாரிசுகள் ஆள
அன்று அடிமை நாட்டில்
நின்று போராடிய
வீட்டிற்கு சேர்த்துவைக்க மறந்த
வாரிசுகளை உயர்த்திவிட மறுத்த
நாட்டின் விடுதலைக்கும்
நமக்கும் சேர்த்து உழைத்த
தன்னலமற்ற தலைவர்களின்
வீட்டில் பிறந்ததாலேயே
வாழ்க்கை இழந்து
வாழ வழி தேடி
பிச்சை எடுக்கும்
பரிதாப வாரிசுகளின் நிலை
எத்தனை பேர் அறிவோம்?
அவர்களின் அவல நிலை
அகற்ற ஆவன செய்வோம்!
அதற்கு ஆவனம் செய்வோம்!!
இந்த வாரிசு அரசியலைப் போற்றுவோம்!!!
கடவுளும்,கந்து வட்டியும்
Monday, November 17, 2008
மற்றவர்களும்,என் இதயமும்
"இதயத் துடிப்பு அடங்குகிறது
இயன்றவரை செய்துவிட்டோம்
இன்று இரவு தாங்காது
இறைவனிடம் வேண்டுங்கள்"
அவசரச் சிகிச்சை பிரிவில்
தீவிர சோதனைகளுக்குப்பின்
சூழ்ந்து நிற்கும் சொந்தங்களிடம்
சொல்லிக்கொண்டிருக்கிறார் மருத்துவர்
என் இதயத் துடிப்பா?
நிற்கப்போகிறதா?
அது எப்படி நிற்கும்?
அயல் நாட்டு சாதனங்களாலும்
அனுபவப் பாடங்களாலும் கூட
சரியாகக் கணிக்க முடியவில்லையே
அவர்களை பார்த்தால்
எனகுப் பாவமாக இருக்கிறது
இதயமற்ற இறைவனிடம் என்
இதயம் காக்க வேண்டிக்கொண்டு
இரவு முழுவது கண் விழித்து
இதமாய் கவனிப்பார்கள் பெற்றோர்கள்
நலம் விசாரித்துவிட்டுச் செல்லும்
நண்பர்கள் கவலையோடு
நடுநிசிவரைக் பார்த்திருப்பார்கள்
நிகழ்வுகளை அசை போட்டிருப்பார்கள்
என்னுள் இருக்கும் இதயம்
எனக்காக மட்டுமே துடிப்பதாக
தவறுதலாய்க் கணித்துவிட்டு
தவிப்போடு காத்திருக்கிறார்கள்
அவர்களை நினைத்தால்
எனக்குப் பாவமாக இருக்கிறது
அவர்களுக்குத் தெரியாது
அது அதனுள் இருக்கும்
என் அவளின் இதயத்துக்காகத்
துடித்துக்கொண்டிருக்கிறது
பிறகு எப்படி நிற்கும்?
Saturday, November 15, 2008
காதலனை சந்திக்க ...
முகம் பார்க்காமல்
முடிந்தே விட்டது
முழுவதுமாய் ஒரு ஆண்டு
முப்பதாண்டு வேதனை எனக்கு
தடை எத்தனை வந்தாலும்
தண்டனை ஏதும் கிடைத்தாலும்
அந்திசாயும் நேரம் அவரை
சந்திக்கத்தான் போகிறேன் தோட்டத்தில்
அடக்கி வைத்த அத்தனையும்
அவர் முன்னால் அள்ளித் தெளிக்கப்போகிறேன்
பொத்திவைத்த மொத்தத்தையும்
அவர் முன்னால் கொட்டித் தீர்க்கப்போகிறேன்
என்னை தினமும் எதிர்பார்த்து
ஏமாந்து போயிருப்பாரோ?
எதிர்பாராமல் இன்று பார்த்ததும்
எழுந்து வந்து அணைப்பாரோ?
வந்துவிட்டேன் தோட்டத்திற்கு
வரவேற்காமல் அமைதியாய் அவர்
சொந்தங்கள் சூழ்ந்திருக்க
சலனங்கள் ஏதுமின்றி அவர்
அன்று பார்த்த அதே கண்கள்
இன்றும் என்னவோ சொல்லத் துடிக்கின்றன
கண்கள் சிவக்க அவர் அப்பா வலப்பக்கம்
கொடுவாள் மீசையோடு மாமா இடப்பக்கம்
கை கட்டி பின்னால் என் அப்பா
கவலையோடு அருகே என் தம்பி
சுற்றியிருக்கும் சுற்றத்தின் முன்னால்
சொல்லவந்ததை சொல்ல முடியாமல்
கொண்டுவந்த மலர்களை மட்டும் அவர்கள்
காலடியில் வைத்து விட்டு
ஒன்றல்ல இரண்டல்ல
ஒட்டு மொத்த சொந்தத்தையும்
ஒரே நாளில் இழந்துவிட்டு
தனி மரமாய் அத்தனை
துக்கத்தையும் சுமந்துகொண்டு
வந்த வழி திரும்புகிறேன் தனியே
அந்தத் தோட்டத்திலிருந்து !
கல்லறைத் தோட்டத்திலிருந்து !!
Thursday, November 13, 2008
எங்கே அவன் ?
புத்தாண்டு 2108 ல்
புதிய உலகம் கண்டுபிடிக்க
புறப்பட்டோம் பிரபஞ்சப்பயணம்
பறக்கத் தொடங்கி ஆண்டுகள்
பல பறந்து போயின
சூரியனிலிருந்து சக்தி பெற்று
சளைக்காமல் எங்களை
சுமந்து செல்லும்
சின்னஞ்சிறிய விண்கலம்
வானில் சூழல் புரிந்து
வந்துபோகும் திசை தெரிந்து
வரப்போகும் இடர் அறிந்து
வழி நடத்த நான்
என் சைகை புரிந்து
தன் கணினியுடன் இணைந்து
கண நேரம் இமைக்காமல்
கலம் செலுத்த அவன்
இருக்கை மட்டுமே எங்கள்
இருப்பிடமும் உலகமும்
இருவரும் இதுவரை
இரு நிமிடம் பிரிந்ததில்லை
இருந்தாலும் சேர்ந்தார்ப்போல
இரு நிமிடம் பேசியதுமில்லை
பூமியிலிருந்து கிளம்பி
சூரியனிலிருந்து விலகி
நிலவு தாண்டி
செவ்வாய் கடந்து
தொடர்ந்து ஒளிவேகத்தில்
போய்க்கொண்டே......... . . . . . . . . .
திடீரென உறக்கம் கலைந்தேன்
தடுமாற்றம் கலத்திலும் உணர்ந்தேன்
எதிர்பார்க்கவே இல்லை
எதிரே புதிய விண்கோளம்
ஒன்று ஒன்பதாக
ஒன்பது எண்பதாக
வெடித்துச் சிதறி
பெருகிக்கொண்டே இருக்கிறது
நெருப்பு மழையாக
உயிர் தப்ப வேண்டுமெனில்
உடனே கலம் திருப்ப வேண்டும்
உள்ளம் துடிக்கத் திரும்பினேன்
உடன் இருந்தவன் அங்கு இல்லை.
Wednesday, November 12, 2008
என்ன தான் செய்யலாம் ?
அலுவலகத்தில் அல்லல்பட்டு
அமைதி நாடிவரும்போது
எள்ளும் கொள்ளும் வெடிக்கும்
அதிரடிப் படையாய்.,
சிறுதவறு செய்துவிட்டு
செய்தி கசிந்து மாட்டிக்கொண்டு
கலவரம் எதிர்பார்த்து
கதவு திறந்து மெதுவாய்
காலடிவைத்தால்
அமைதியே உருவான
சமாதானப் புறாவாய்.,
சந்தோசச் செய்தியோடு
ஆனந்த அதிர்ச்சி தர
துள்ளிக்கொண்டு முன்னால்
திடீரென போய் நின்றால்
அதிர்ச்சி தன்னையேத்
திருப்பித் தாக்கும்படி
கொந்தளிக்கும் கலக பூமியாய்.,
என்னதான் செய்வான் அந்த
ஏதுமறியாத அப்பாவிக் கணவன்
(பி.கு :எதிர்ப்பு தெரிவிக்கும் சங்கத்தினர்
மனைவி என்று மாற்றிப் படிக்கவும்
இணைப்புப் படம்
நகைத்து ரசிக்க மட்டும்
நடைமுறைக்கு அல்ல )
Monday, November 10, 2008
அந்த ஐந்தாவது நபர் !
அம்மா மடியில் நான்
தலை வைத்திருக்க
அப்பா கால் அமுக்க
அக்கா விரல் சொடுக்க
அரைக்கண் திறந்து
அறையோர சன்னலைப் பார்க்கிறேன்
சாத்திய கதவுக்குப்பின்னால்
ஏக்கத்தோடு இரு கண்கள்
என்னையே பார்த்துக்கொண்டிருப்பது
எனக்கு மட்டும் தெரியும்
சனிக்கிழமை சாயங்காலம்
அப்பா வாங்கிவரும்
இனிப்புச் சேவுக்கும்,
அம்மா பாசத்தையும் சேர்த்து
கரைத்துவைத்த கஞ்சிக்கும்
அரைத்துவைத்த துவையலுக்கும்
அக்காவோடு சண்டைபோட்டு
வரிசையில் நிற்கும்
கடைக்குட்டி எனக்கு
பின்னாலிருந்து
நீட்டிக் கொண்டிருக்கும்
இரண்டு கைகள்
எனக்கு மட்டும் தெரியும்
அப்பாவின் கண்ணைக் கட்டிவிட்டு
அம்மா கதவுக்குப் பின் மறைய
அக்கா கட்டிலுக்கு கீழே பதுங்க
அவசரமாய் இடம் தேடி நான்
அலமாரி கதவு திறக்க
அங்கே எற்கனவே முக்காடிட்டு
ஒளிந்திருந்தது யார் என்று
எனக்கு மட்டும் தெரியும்
அப்பாவின் மிதிவண்டியில்
எங்களுக்கே இடமில்லாதபோது
விடாமல் பின்னால்
அடம் பிடித்தபடி
தொங்கிக்கொண்டே வரும் அந்த
ஐந்தாவது நபர் யார் என்று
எனக்கு மட்டும் தெரியும்
அப்பாவுக்கு நெஞ்சுவலி என
அவசர சேதி வர
புதை மணலில் நெஞ்சம்
பதைபதைக்க ஓடும்
என்னைத் தாண்டி
முன்னால் பதியும்
காலடித்தடங்கள்
யாருடையது என்பது
எனக்கு மட்டும் தெரியும்
எல்லோருக்கும் தெரியும்
என்குடும்பம் ஒரு கோவில் என்று
எனக்கு மட்டுமே தெரியும்
அந்த ஐந்தாவது நபர்
கடவுள் என்று.
Saturday, November 8, 2008
பத்தே பைசாதான் !
'அய்யா' என்ற அவலக்குரல்
அவசரமாய் வாசல் வந்தேன்
கையில் குழந்தையோடும்
கண்கள் நிறைய பசியோடும்
தட்டு நிறைய எதிபார்ப்போடும்
சுட்டெரிக்கும் வெயிலில்
எட்டுவயது சிறுமி பிச்சை கேட்டு
"போ!போ!!" என உறைத்து
புறங்கையால் இல்லையென மறுத்து
உறத்து கதவடைத்து
உள்ளே திரும்பினேன்
உள்ளம் அதிர திடுக்கிட்டேன்
மூடிய கையில் பத்துபைச்சாவுடனும்
திறந்த கண்ணில் அதிர்ச்சியோடும்
எதுசரி என்ற குழப்பத்தோடும்
என்முகத்தில் எதையோ தேடியபடி
எதிரே என் குட்டிக் குழந்தை
ஒருநொடியில் உறைந்துபோனேன்
மறுநொடியே உடைந்தும் போனேன்
நல்ல அப்பா என் உருவத்தை
நானே கலைத்துவிட்டேனா?
குற்ற உணர்வில் மூழ்கிப்போனேன்
குழந்தைமுகம் பார்க்கவே இல்லை
பலவற்றை இழந்திருக்கிறேன்
வாழ்க்கையில்
பதறியதே இல்லை
பத்தே பைசாதான்
பல நாள்
தூங்கவே இல்லை.
Wednesday, November 5, 2008
ஒய்யாரக் கொண்டை
கோடிகளைக் கொட்டி
குளிர்சாதன வசதியோடு
கோபுரமாய் எழுந்து நிற்கும்
கல்யாண மண்டபம்
லட்சங்களில் தோரணம் கட்டி
நோட்டுக்களால் கம்பளம் விரித்து
வாகனங்களால் நிரம்பி வழியும்
வரவேற்பு நுழைவாயில்
மிச்சம் வைப்பதையே அந்தஸ்த்தின்
உச்சம் எனக் கருதும்
தட்டை கையில் ஏந்திய
மேல்தட்டு மக்கள்
சாப்பாட்டு அறையில்
பட்டுச் சேலையில்
தொட்டுப் பேசாத
நாகரீக நங்கைகள்
நவீன மணமேடையில்
ஒட்டு சேலையில்
பட்டினியோடு
எல்லோருக்கும்
சமைக்கும்
சமையல்காரி
சமையலறையில் .
Tuesday, November 4, 2008
இரண்டாவது அம்மா
பெத்ததே
போதுமென
மொத்தமாய் போய்
சேர்ந்துவிட்டாள் அம்மா
அறியாத வயதில்
தெரியாத பொறுப்பை
புரியாமலேயே ஏற்று
பெரியமனுசி ஆகிப்போன அக்கா,
என் கை பிடித்துக் கூட்டிச் செல்ல
என் பை தூக்கி அழைத்துச் செல்ல
தன் படிப்பை இழந்த
தற்குறி ஆகிப்போன அக்கா,
ஆறு வயதுவரை என்னை
அரையிலிருந்து இறக்காமல்
தரையே தொடவிடாமல்
தலை தடவி பாதுகாத்த அக்கா,
கரையேற வழியில்லாமல்
காத்து நிற்கிறாள்
காரியம் கைகூடுமென
கனவோடு நிற்கிறாள்
எப்படியும் முடிப்பேன் என
எதிர்பார்த்து நிற்கிறாள்
என் முகம் பார்த்து
ஏங்கி நிற்கிறாள்.
என்னசெய்யப் போகிறேன் நான்?
ஒத்த மூக்குத்திக்கும் !
ஒருசோடி கம்மலுக்கும் !!
Sunday, November 2, 2008
மனிதன் என்ற ஒருவன்
விபத்தில் காயம் பட்டு
சாலையில் கிடப்பவரை
பாவப்பட்டுக் கொண்டே
கடந்து செல்கிறோம்
தெருவில் கல்லடிபட்ட நாய்க்காக
இரக்கப்பட்டுக் கொண்டே
இறைச்சிக் கடையில்
வரிசையில் நிற்கிறோம்
பத்தாயிரம் செலவு செய்ய மனமில்லாமல்
முப்பதாயிரம் நன்கொடை கொடுத்து
முதியோர் இல்லத்தில்
சேர்த்து வருகிறோம்
பசியோடு வருபவருக்கு
இல்லையென மறுத்து
பல கோடி காணிக்கையாய்
உண்டியலில் செலுத்தி
புண்ணியம் தேடுகிறோம்
வீடு தாண்டி வெளியே
உள்ள உறவு முறை
தெரியாமலேயே போனதை
பெறுமையாய் பேசுகிறோம்
உங்களுக்குத் தெரியுமா?
முன்பு ஒரு காலத்தில்
மனிதன் என்ற ஒருவன்
இருந்தான் என்று
Saturday, November 1, 2008
உண்மையைச் சொல்கிறேன்.
பூவில் தேன் உண்ட பட்டாம்பூச்சி
சிறகுகள் படபடக்க
விண் நோக்கிப் பறக்கையில்
அதன் வண்ணங்கள் சிதறி
சித்திரம் போல உதிர்கிறதே
கிழக்குச் சூரியனின்
காலைக் கதிரின்
வெளிச்சத்தில் உலகம்
நிமிடத்துக்கொரு நிறத்தில்
வானவில்லாய் தெரிகிறதே
விண்ணிலிருந்து விழும்
மழைத் தூறலின்
ஒவ்வொரு துளியிலும்
வெவ்வேறு வாசம் வீசுகிறதே
சுழற்றியடிக்கும் காற்றின்
சத்தத்தில் இருந்து
இதுவரை தெரியாத
மொழிகளின் அர்த்தங்கள்
பல எளிதாய் புரிகிறதே
ஆமாம் நண்பர்களே
அன்புத் தோழர்களே
நான் காதலிக்கப்படுகிறேன்
Subscribe to:
Posts (Atom)